புதன், 15 டிசம்பர், 2010


10:56 PM |

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தமிழ் வழித் தேர்வு வெற்றி சாத்தியமாகாதது ஏன்?



First Published : 19 Aug 2010 04:08:07 AM IST



Last Updated :
19 Aug 2010 04:51:28 AM IST


இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து தமிழக மாணவர்களிடையே உள்ள ஆர்வமும், விழிப்புணர்வும் தான் இதற்கு முக்கியக் காரணம். நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் அதிகம் பங்கேற்றுவருவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.÷இருந்த போதிலும் தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது குறைவாகவே இருப்பது சற்று கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. பொதுவாக கிராமப்புறத்தில் இருந்து தமிழ் வழிக் கல்வி படித்து வரும் மாணவர்கள்தான் ஐ.ஏ.எஸ். தேர்விலும் தமிழ் வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்களால் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது. தமிழ் வழியில் தேர்வில் பங்கேற்கும்  மாணவர்களுக்கும் வெற்றி பெறும் மாணவர்களுக்கும் இடையே உள்ள விகிதம் மிக மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கடந்த ஆண்டு தமிழ் வழியில் தேர்வை எழுதிய ஒரு சில மாணவர்களே தேர்ச்சி பெற்றனர் என்பது கவலை தரக்கூடிய விஷயம். ஏன் இந்தநிலை, இந்நிலை மாற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்துபவர், கல்வியாளர் மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்றவரிடம் கேட்டபோது: சைதை சா.துரைசாமி,(தலைவர், மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச பயிற்சி மையம்)
சிவில் சர்வீசஸ் தேர்வு பாடத்திட்டத்திற்கு ஏற்ப புத்தகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ உள்ளது போல தமிழ் வழியில் புத்தகங்கள் கிடைப்பதில்லை. அப்படி, இருந்தாலும் அவை பெரும்பாலும் 1970 மற்றும் 1980களில் வந்த பதிப்பாகவுள்ளது. தமிழ்வழியில் கிடைக்கப் பெறாத பாடத்துக்கு, ஆங்கில வழியில் உள்ள புத்தகங்களையே நாட வேண்டியுள்ளது. அவற்றை படித்து தமிழாக்கம் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும் பிறமொழியில் உள்ள பாடத்திட்டத்துக்கு தேவையான புத்தகங்களை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கு பதிப்பகத்தார் பலரும் முன் வரவில்லை.இதனால் தமிழக அரசு இதில் சிரத்தை எடுக்க வேண்டும். நிபுணர் குழு ஒன்றை அமைத்து சிவில் சர்வீசஸ் பாடத்திட்டத்துக்கு ஆங்கில மொழியில் உள்ள சிறந்த புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்.அருளானந்தன் ஐ.டி.ஏ.எஸ். (நிதி மற்றும் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி, இந்திய பாதுகாப்புத் துறைதமிழகத்தில் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களுமே ஆங்கிலத்துக்கு மட்டும் முன்னுரிமை அளித்து பயிற்சி அளிக்கின்றன. இதனால் தமிழ் வழியில் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு போதிய வழிகாட்டுதலும், பயிற்சியும் கிடைப்பதில்லை.சிவில் சர்வீஸ் தேர்வில் நேரம் மேலாண்மை என்பது அவசியம். தமிழ் வட்ட எழுத்தாகவுள்ளதால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் கேள்விகளுக்கு பதிலை எழுதுவது இயலாமல் போய்விடுகிறது. இதனாலும் தமிழ் வழி மாணவர்கள் முதன்மைத் தேர்வில் அதிக மதிப்பெண்ணை பெற முடியவில்லை.சிவராஜ்வேல் (சங்கர் ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய சமூகவியல் கல்வி நிபுணர்)
சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ் வழியைத் தேர்ந்தெடுத்து எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாகவுள்ளது உண்மைதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன. எனினும் தமிழ் வழி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்ணை பெற்று வெற்றியை இழப்பதற்கு மூன்று முக்கிய காரணங்களை கூறலாம்.முதலாவதாக, சிவில் சர்வீசஸ் தேர்வு பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள் தமிழ் மொழியில் கிடைப்பதில்லை. விருப்பப்பாடம் மட்டுமல்லாது பொது அறிவியல் பாடங்களுக்கும் தமிழில் புத்தகங்கள் கிடைப்பது இல்லை. இதனால் தமிழ் வழியில் எழுதும் மாணவர்களால் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கில வழி மாணவர்களுக்கு நிகராகப் பதிலை செறிவுடன் கொடுக்க முடியவில்லை. இரண்டாவதாக, பெரும்பாலும் கிராமப்புறங்களில் தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்கள் தான் சிவில் சர்வீஸ் தேர்விலும் தமிழ் வழியைத் தேர்ந்தெடுத்து எழுதுகிறார்கள். இதுபோன்ற மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொள்வதும் கடினமாக உள்ளது. சில நேரங்களில் மாணவர்கள் கேள்விகளின் அர்த்தத்தை தவறுதலாகப் புரிந்து கொண்டு பதில் எழுதிவிடுவதால் மதிப்பெண்ணை இழக்க நேரிடுகிறது.மூன்றாவதாக, தமிழ் வழியில் நேர்முகத் தேர்வை சந்திக்கும் மாணவர்களால் பெரும்பாலும் அதிகமான மதிப்பெண்ணை பெற முடிவதில்லை. தமிழ் வழியில் நேர்முகத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் கூறும் பதிலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கு யுபிஎஸ்சி மொழி பெயர்ப்பாளரை நியமிக்கிறது. இவ்வாறு நியமிக்கப்படும் மொழி பெயர்ப்பாளர் சில நேரங்களில் மாணவர்களின் பதிலை தவறுதலாக மொழி பெயர்த்து கூறிவிடுகின்றனர். இதுபோன்ற தருணங்களிலும் தமிழ் வழி மாணவர்கள் மதிப்பெண்ணை இழக்கும் நிலை உள்ளது.


You Might Also Like :


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...