செவ்வாய், 1 மார்ச், 2011

குழு விவாதத்தில் ஜொலிக்க செய்ய வேண்டியவை

Posted On 8:41 PM by pmect 0 கருத்துகள்

 அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்றைய போட்டி நிறைந்த உலகில், திறமையான நபர்களை தேர்வுசெய்யவே நிறுவனங்கள் விரும்புகின்றன. இதன் காரணமாக நிறுவனங்கள் வேலை நியமனம் செய்யும்போது பல்வேறு விதமான தேர்வு முறைகளை நடத்துகின்றன. அதில் "குரூப் டிஸ்கஷன்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் குழுவிவாதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

* தினசரி செய்தித்தாள்களை படிப்பதை வழக்கமாக வேண்டும்
* அறிவுசார் புத்தகங்கள், வார மற்றும் மாத இதழ்களை படிக்கலாம்.
* நண்பர்களுடன் தினமும் ஒரு தலைப்பில் பேசி பழகலாம்.
அன்றாட நிகழ்வுகள் குறித்த உங்களது கருத்துக்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுகுறித்த கருத்துகளை அவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ள முற்பட வேண்டும்.
*  கண்ணாடி முன்பு நின்று பேசி பழகலாம். அப்போது உங்கள் உடல் அசைவுகளை ("பாடி லாங்வேஜ்') சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
* தன்னம்பிக்கையுடன் பேச கற்றுக்கொள்ளுங்கள்.
* விரைவாக சிந்தித்து சரியான வாதத்தை எடுத்துரைக்க வேண்டும்.
* உங்களது தலைமைப்பண்பை பேச்சில் வெளிப்படுத்த வேண்டும்.
* மற்றவர்களும் பேச போதிய வாய்ப்பு வழங்க வேண்டும்.
* தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதை தவிர்க்க வேண்டும்.
* உங்களது வாதம் சுருக்கமாகவும், தெளிவாகவும், இயல்பாகவும் இருக்க வேண்டும்.
* இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கிலப்புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
* மற்றவர்கள் பேசுவதையும் நன்கு கவனிக்க வேண்டும். அதன்மூலமாக புதிய கருத்துக்களை நீங்கள் எடுத்துரைக்க முடியும்.


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

உங்களின் வார்த்தை வளத்தை மேம்படுத்துங்கள்

Posted On 4:04 AM by pmect 0 கருத்துகள்

வார்த்தைகள் என்ற பூக்கள்தான், மொழி என்ற மாலைக்கான அடிப்படை. வார்த்தை வளங்களைப் பொறுத்தே மொழியின் சிறப்பு அமைகிறது.

எந்த ஒரு மொழியையுமே சிறப்பாக பேச வேண்டுமெனில், இலக்கணத்தோடு, வார்த்தை வளமும்(வொகாபுலரி) மிக முக்கியம். ஒரு புதிய மொழியை கற்கும்போது அதன் வார்த்தை வளத்தை நாம் வசமாக்கி கொண்டால்தான் நம்மால் விரைவாகவும், சிறப்பாகவும் அந்த மொழியை கற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய நிலையில் ஆங்கிலம் என்பது நாம் அனைவருமே கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு முக்கிய மொழியாக இருக்கிறது. ஆங்கிலத்தில் புலமை பெறும் முயற்சியில் பலரும் பலவிதமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆங்கில இலக்கணத்தை(கிராமர்) தெரிந்து கொண்டாலும், அம்மொழியின் வார்த்தை வளத்தை, எளிதில் மனதில் பதிய வைக்க முடியாமல் திணறுகின்றனர். ஆங்கில மொழியின் வார்த்தை வளமானது, பி.எம்.எஸ், டோபல், கேட் போன்ற பல தேர்வுகளுக்கு முக்கியம். அதுமட்டுமின்றி தற்போது பொதுத் தேர்வுகள் நெருங்கும் சமயத்தில் ஆங்கில வார்த்தை வளம் முக்கியத்துவம் பெறுகிறது.

சில முக்கியமான வழிமுறைகளை தவறாமல் பின்பற்றினால், ஆங்கில வார்த்தை வளத்தை நாம் சிறப்பாக தக்கவைக்க முடியும்.

* அதிகமாக படிப்பதால் வார்த்தை வளம் அதிகரிக்கும் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் அந்த செயல்பாட்டில் சில வழிமுறைகளைக் கடைபிடித்தால்தான் வார்த்தை வளத்தை தக்க வைக்க முடியும். நீங்கள் ஒரு ஆங்கில புத்தகத்தையோ அல்லது செய்தித்தாளையோ படிக்கும்போது உங்களுக்கு தெரியாத ஒரு புது வார்த்தையை கண்டால், உடனடியாக அகராதியை(டிக்ஷனரி) எடுத்துப் பார்க்க வேண்டும். இந்த அர்த்தமாகத்தான் இருக்கும் என்று நீங்களாகவே கற்பனை செய்துகொள்ளக் கூடாது. ஆனால் பலரும் இதை செய்வதில்லை. அகராதியை புரட்டவே சோம்பேறித்தனப்படுகின்றனர். இதனால் இழப்பு அவர்களுக்குத்தான்.

* ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை ஒருமுறை கண்டுபிடித்துவிட்டால், அந்த வார்த்தையை நீங்கள் உரையாடும்போது அடிக்கடி பயன்படுத்த முயற்சிக்கவும். மேலும் எழுதும்போதும் அந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்த பழக வேண்டும். இதுபோன்று அடிக்கடி செய்வதால், அந்த வார்த்தை எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும், உங்களின் ஞாபகத்திலிருந்து நீங்காமல், உங்களுடனேயே நிலைத்துவிடும்.

* வார்த்தை வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கென்றே தனியாக பல புத்தகங்கள் விற்பனையாகின்றன. அவற்றில் உங்களுக்கு ஏற்ற புத்தகத்தை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். அந்த புத்தகம் மிகவும் பெரிதாக இருக்க வேண்டாம். ஏனெனில் பெரிய புத்தகங்களை வாங்கிய பலர், அதில் சில பக்கங்களுக்கு மேல் சென்றதில்லை.

* ஒரு நாளைக்கு 3 வார்த்தைகள் அல்லது 5 வார்த்தைகள் அல்லது ஒரு வாரத்திற்கு 20 அல்லது 25 வார்த்தைகள் என்ற அளவுகளில் உங்களின் ஞாபகத்திறனைப் பொறுத்து எண்ணிக்கையை நிர்ணயித்துக் கொள்ளவும். என்னதான் எண்ணிக்கை நிர்ணயித்தாலும், புதிய வார்த்தைகளை நிரந்தரமாக நினைவில் வைத்துக்கொள்வதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனில், நமது லட்சியம் நிறைவேறாது.

* வார்த்தைகளை கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டப் பிறகு, அந்த முயற்சியை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வார்த்தை என்றாலும் முயற்சி என்பது தொடர்ச்சியான செயல்பாடாக இருக்க வேண்டும். இடையிலேயே முயற்சியை கைவிடும்போது, ஏற்கனவே நாம் கற்ற புதிய வார்த்தைகளும் ஞாபகத்தை விட்டு அகன்றுவிடும். இடைவெளிவிட்டு ஒவ்வொரு முறையும் முயற்சியை தொடங்கும்போதும், நாம் மறுபடியும் மறுபடியும் விட்ட இடத்திலிருந்தே ஆரம்பிக்கும் பரிதாப நிலைக்கு ஆளாவோம். நமது ஆற்றல்தான் விரயமாகும்.


திங்கள், 7 பிப்ரவரி, 2011

தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்

Posted On 3:17 AM by pmect 0 கருத்துகள்


அல்லாஹ்வின் திருப்பெயரால்
இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் தொழுகை, தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில் வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில் இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக் கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தொழுகையில் வரிசையில் நிற்பதற்கான ஒழுங்குகளில் பின்னுள்ளவைகளை பேணுதல் அவசியமாகும்.
1. முன் வரிசையின் சிறப்புகள்
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்.
5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
6. பெண்கள் நிற்கும் வரிசை
1. தொழுகையில் முன் வரிசையின் சிறப்பு
மக்கள் பாங்கிலும், முன் ஸஃப்பிலும் உள்ள சிறப்புகளை அறிந்து, பிறகு அவ்விரண்டும் குலுக்கல் மூலம் தான் பெறமுடியுமென்றிருந்தால் (அவர்கள் அதற்கும் தயாராகி) குலுக்கல் மூலம் அவைகளைப் பெற்றுக் கொள்வர் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் அணிவகுப்பது போல், தொழுகையில் நீங்கள் அணிவகுக்கக் கூடாதா? எனக் கூறினார்கள். அப்பொழுது நாங்கள் யாரஸுலுல்லாஹ் மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் எவ்வாறு அணிவகுக்குகிறார்கள்? எனக் கேட்டோம். அதற்கவர்கள், அவர்கள் முந்திய ஸஃப்புகளை முழுமைப் படுத்துகிறார்கள், ஸஃப்பில் நெருக்கமாக இருக்கிறார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
விளக்கம்: இவ்விரண்டு ஹதீதின் மூலம் முன் வரிசையில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள முடியும். ஆகவே முடிந்த அளவு முன்வரிசையில் தொழ அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2. வரிசையில் நேராக நிற்க வேண்டும்
நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள். பிறகு கூறுவார்கள், நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள். ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுப் போகும். (ஸஃப்பில்) என்னையடுத்து அறிவிற் சிறந்தோர் நிற்கட்டும். பின்னர், அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும், பின்னர் அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும். (முஸ்லிம்)
உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)
புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர் செய்வது தொழுகையை நிலைநாட்டும் விஷயங்களில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களின் ஸஃப்புகளைச் சீராக்குங்கள்! நன்றாக நெருங்கி நில்லுங்கள், நிச்சயமாக நான் என் முதுகுக்கு பின்னால் உங்களைப் பார்க்கிறேன். (இது புகாரியின் வாசகமும், முஸ்லிமின் கருத்துமாகும்)
புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில் நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம் தோள்பட்டையை அருகிலுள்ளவரின் தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நீங்கள் உங்கள் ஸப்புகளைச் சீராக்கி கொள்ளூங்கள் இல்லையெனில் அல்லாஹுதஆலா உங்கள் முகங்களுக்கிடையில் (உங்களுக்கிடையில்) வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்:. (புகாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: நாங்கள் புரிந்து கொண்டு சரியாக நிற்கிறோம் என்பதை பார்க்கும் வரை நபி (ஸல்) அவர்கள் அம்புகளை சீர்படுத்துவது போல் எங்கள் ஸஃப்புகளைச் சீர்படுத்துவார்கள். பின்பு ஒரு நாள் அவர்கள் தொழுகைக்காக வீட்டிலிருந்து வந்தார்கள். (தொழுகையை ஆரம்பிக்க) தக்பீர் சொல்ல நெருங்கிவிட்டார்கள். அப்பொழுது ஒருவர் ஸஃப்பை விட்டு தம் நெஞ்சை வெளிப்படுத்தி (ஸஃப்பை விட்டு சற்று முன்னால்) நிற்பதை அவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் ஸஃப்புகளை சீராக்கிக் கொள்ளுங்கள் அவ்வாறு இல்லையெனில் அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் பிளவையும், வேறுபாட்டையும் ஏற்படுத்தி விடுவான் என எச்சரித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஸஃப்பின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குப் புகுந்து செல்வார்கள். எங்கள் நெஞ்சுகளையும் தோள்பட்டைகளையும் தடவி விடுவார்கள். அப்பொழுது கூறுவார்கள்: (ஸஃப்பில்) நீங்கள் வேறு படாதீர்கள் அவ்வாறு நீங்கள் வேறுபட்டால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டு விடும். மேலும் அவர்கள் கூறுவார்கள், நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் முந்திய ஸப்புகளில் உள்ளவர்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். (அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள்: அல்லாஹ், அவர்கள் மீது தன் அருள்களைப் பொழிகிறான் என்பதாகும். மலக்குகள் ஸலவாத் கூறுகின்றார்கள் என்பதின் பொருள், மலக்குகள் அவர்களுக்காக துஆச் செய்கின்றனர் என்பதாகும்) (அபூதாவூது)
விளக்கம்: தொழுகையில் வரிசையில் நிற்கும் போது நெருக்கமாகவும் நேராகவும் நிற்க வேண்டும். நெருக்கமாக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்தில் உள்ளவர்களின் தோள்புயத்துடன் நமது தோள்புயமும் கால் பாதத்துடன் கால் பாதமும் சேர்ந்திருக்க வேண்டும். நேராக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்திலுள்ளவர்களின் கணுக்காலுடன் நமது கணுக்கால் சேர்ந்திருக்க வேண்டும். விரல் நுனிகளை வைத்து நேர் பார்க்கக்கூடாது. நமது காலை பக்கத்திலுள்ளவர்களின் காலுடன் சேர்க்கும்போது மிருதுவைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோவினை ஏற்படும் அளவிற்கு கடினத்தை கைவிட வேண்டும். பின்வரும் ஹதீது அதை தெளிவுபடுத்துகின்றது.
உங்கள் ஸஃப்புகளை நேராக நிலை நாட்டுங்கள். உங்கள் தோள் பட்டைகளுக்கு நேர் படுங்கள், இடைவெளிகளை நிரப்புங்கள். உங்கள் சகோதரர்களின் கரங்களுடன் மென்மையைக் கடைபிடியுங்கள். ஷைத்தானிற்காக இடைவெளியை விட்டு விடாதீர்கள். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது)
இந்த ஹதீதில், தொழுகையில் வரிசையில் இடைவெளி விடுவதுபற்றி கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் இன்னும் இது விஷயத்தில் மக்கள் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபற்றி அறியாமையில் உள்ள மக்களுக்கு பக்கத்தில் தொழும் போது பல சிரமங்களையும் நாம் எதிர் நோக்கின்றோம், அவர்களின் கால் பாதத்துடன் நமது கால் பாதத்தை சேர்க்க முனையும் போது அவர்கள் ஏதோ அது ஒரு பாவகரமான செயல் போன்று நினைத்து, அவர்கள் நம்மை விட்டும் வெகு தூரம் நகர்ந்து விடுகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள், இச்சுன்னாவை நினைவில் வைத்து இனிமேலாவது இதை செயல் படுத்த முன்வர வேண்டும். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் இப்படிப்பட்டவர்கள் ஞாபகம் வைத்து கொள்ளட்டும்.
3. வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
நீங்கள் உங்களின் வரிசைகளை நெருக்கமாகவும் சமீபமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள், கழுத்துகளுக்கு நேராக நில்லுங்கள், என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக, வரிசையின் இடைவெளிகளில் சிறிய கறுப்பு ஆட்டுக்குட்டியின் தோற்றத்தில் ஷைத்தான் நுழைகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
விளக்கம்: வரிசையில் இடைவெளி விட்டு நின்றால் அங்கே ஷைத்தான் கருப்பு ஆட்டுகுட்டி உருவத்தில் நுழைந்து நமது உள்ளங்களில் பல எண்ணங்களை உண்டுபண்ணி நமது தொழுகைகளை பாழாக்கிவிடுவான், ஆகவே வரிசைகளில் இடைவெளி விடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
4. முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
முதல் ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். பிறகு அடுத்த ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். ஸஃப்பில் குறை இருக்குமாயின் அது கடைசி ஸப்பாக இருக்கட்டும். (அபூதாவூது)
விளக்கம்: முன் உள்ள வரிசையில் இடம் இருக்கும் போது அடுத்த வரிசையை ஆரம்பிக்கக் கூடாது, முன்வரிசையை முழுமை படுத்திய பின்பே அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும். இன்று சில பள்ளிகளில், தொழுகை முடிந்துதும் பள்ளியை விட்டும் புறப்பட்டு விட வேண்டும் என்பதற்காக அல்லது மின்விசிறிக்குக் கீழ் நிற்க வேண்டும் அல்லது எயர் கண்டிஸனுக்கு நேராக நிற்க வேண்டும் என்பதற்காக அல்லது இதுபோன்ற பல காரணங்களுக்காக முன் வரிசையில் இடமிருந்தும் தன் சுயநலத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஓர் இடத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்கின்றார்கள். இது முற்றிலும் சுன்னாவிற்கு மாற்றமான முறையும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டியவையுமாகும். இப்படி நடந்து கொள்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
5. இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
தொழுகையில் இமாமை நடுவில் நிற்கச் செய்யுங்கள். ஸஃப்புகளுக்கு இடையில் இடைவெளியை அடையுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)
இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து இரவு தொழுகை தொழுவதற்காக அவர்களின் இடது பக்கம் எழுந்து நின்றேன். பின்பக்கமாக என் தலையை நபி (ஸல்) அவர்கள் பிடித்து அவர்களின் வலது பக்கத்திலே என்னை நிறுத்தினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)
6. பெண்கள் நிற்கும் வரிசை
நானும் ஒரு அனாதையும் எங்களின் வீட்டிலே நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (இரவுத் தொழுகை) தொழுதோம், என் தாய் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் எங்களுக்கு பின் நின்றுதொழுதார்கள். (புகாரி)
விளக்கம்: மேல்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து பல சட்டங்களை நாம் விளங்கலாம், இருவர் ஜமாஅத்தாக தொழுதால் மஃமூமாக நிற்பவர் இமாமின் வலது பக்கத்தில் நிற்க வேண்டும். இரண்டாவது நபர் வந்து விட்டால் இவர் இமாமுக்கு பின்பக்கமாக சென்று அவ்விருவரும் இமாமுடைனய வலது இலது பக்கத்தில் நிற்க வேண்டும். அதன் பின் வருபவர்கள் வலது இடது பக்கமாக நிற்க வேண்டும். மஃமூம்கள் இருவராக இருந்து ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாக இருந்தால், ஆண் இமாமின் வலது பக்கத்திலும் பெண் பின் வரிசையிலும் தனியாக நிற்க வேண்டும். அந்தப் பெண் தனது தாயாக, மகளாக, மனைவியாக இருந்தாலும் சரியே. பெண்களுக்கு சிறந்த வரிசை பின் வரிசையாகும். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.
தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)
ஆகவே, தொழுகையில் வரிசையில் நிற்கும் விஷயத்தில் மேல் கூறப்பட்ட விஷயங்களை முழுமையாக பின்பற்ற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானக!


சனி, 5 பிப்ரவரி, 2011

ஞாபக மறதியா? கவலையே வேண்டாம்...

Posted On 8:35 PM by pmect 0 கருத்துகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

இது தேர்வுகாலம். அனைவருக்கும் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும், முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற பெரிய ஆர்வம் இருக்கும்.
மாணவர்களாகிய நீங்கள் இந்த நோக்கத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு படித்துக் கொண்டிருப்பீர்கள். தூக்கம் தொலைத்து, பசியை தொலைத்து, விளையாட்டை தொலைத்து, பொழுதுபோக்கை தொலைத்து உங்களின் முழு கவனமும் பாடப் புத்தகங்களில் பதிந்திருக்கும்.

என்னதான் கஷ்டப்பட்டு படித்தாலும், தேர்வு எழுதும்போது படித்தது தடையின்றி நினைவிற்கு வந்தால்தான், சிறப்பாக எழுதி, மதிப்பெண்களை வாரிக் குவிக்கலாம். எனவே மாணவர்களுக்கு ஞாபக சக்தி என்பது மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது. சிறப்பான ஞாபக சக்தியே மதிப்பெண்களை அள்ளித்தரும் வள்ளலாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் ஞாபக சக்தி இருக்கிறது. ஆனால் அளவுகள் மாறுபடலாம். நம்முடைய ஞாபக சக்தி எப்படி வேலைசெய்கிறது என்பதை இங்கே விஞ்ஞான முறையில் அலச முயன்றுள்ளோம். இதன்மூலம் நாம் நம் ஞாபகத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கவனித்தல் மற்றும் தேர்ந்தெடுத்தல்:

பார்த்தல், கேட்டல், நுகர்தல் மற்றும் தொடுதல் உள்ளிட்ட பலவகை உணர்வுகளின் மூலமாகவே நாம் பல அடிப்படையான தகவல்களைப் பெறுகிறோம். மேலும் உணர்வுகளின் மூலமாக, எண்ணற்ற தகவல்கள் எல்லா நேரத்திலும் நமக்கு கிடைக்கின்றன. எனவே நாம் இத்தகைய கணக்கற்ற தகவல்களிலிருந்து, எதை நினைவில் வைக்க வேண்டும், எதை ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

குறியீடாக்குதல்:

நினைவில் வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை குறியீடாக மாற்றுவதுதான் இந்த நிலை. ஒலியின் அடிப்படையில்(அக்கவுஸ்டிக் குறியீடு), தோற்றத்தின் அடிப்படையில்(விஷுவல் குறியீடு) மற்றும் அர்த்தத்தின் அடிப்படையில்(செமன்டிக் குறியீடு) குறியீடாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. நீங்கள் எந்த வகையில் குறியீடாக மாற்றுகிறீர்களோ, அந்த வகையிலேயே நினைவூட்டல் நடைபெறுகிறது.

சேகரிப்பு:

தகவல்களை நினைவில் சேகரிக்கும் நிலைதான் இது. நினைவானது குறுகியகால நினைவு மற்றும் நீண்டகால நினைவு என்று 2 வகைப்படும். குறுகியகால நினைவானது, மிக சுருக்கமான காலத்தில், அதாவது ஒரு தொலைபேசி எண்ணை நீங்கள் டயல் செய்யும் வரை நீடிக்கும். டயல் செய்தவுடன் அது மறந்துவிடும். இந்த நினைவுத் திரட்டில் குறைந்தளவு தகவல்கள், குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும். குறுகியகால நினைவை நீண்டகால நினைவாக மாற்றும் செயல்பாட்டில், மீண்டும் மீண்டும் செய்தல் (தொலைபேசி எண்ணை திரும்ப திரும்ப பயன்படுத்துதல்) முறைக்கு அல்லது கடந்தகால நினைவுடன் இணைக்கப்படுதல் அல்லது ஒரு தகவலை தொடர்ச்சியாக பயன்படுத்துதல்(ஒரு பாடத்தை தினமும் சிறிதுநேரம் படிக்கும்போது, அதை புரிந்துகொள்வது எளிதாகிறது) ஆகிய நிலைகளுக்கு மாற்றப்படுகிறது.

தேவைப்படும்போது நினைவுபடுத்துதல்:

இது நினைவுபடுத்துதலைக் குறிக்கிறது. குறியீடாக்கும் பணியில் ஒரு நிலையான முறையை பின்பற்றினால் நினைவுபடுத்துதல் எளிதாக இருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு தகவலை குறியீடாக்கும் பணியில் ஒலி அடிப்படையை பயன்படுத்தியிருந்தால், அதே குறியீட்டு அடிப்படையை பயன்படுத்தி எளிதாக நினைவிற்கு கொண்டுவரலாம். ஆனால் துரதிஷ்டவசமாக, பல மாணவர்கள் குறியீட்டுக்கு ஒரு அடிப்படையை பயன்படுத்திவிட்டு, நினைவுபடுத்தலுக்கு வேறொரு அடிப்படையை பயன்படுத்துகின்றனர். இதனால் விஷயம் எளிதில் நினைவிற்கு வருவதில்லை.

நினைவக செயல்பாடானது 4 வகைகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்த வகைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நமக்கு தேவையானதை நினைவில் வைத்துக்கொள்ள, தேர்ந்தெடுத்தல் அவசியமாகிறது. நமது தேர்ந்தெடுத்தல் செயல்பாடு நேர்மறையாகவோ அல்லது சரியாகவோ அமையவில்லை என்றால், பல தேவையற்ற தகவல்கள் சேமிக்கப்பட்டு விடும். ஒரு மாணவர் என்ற முறையில் தேர்வுக்காக தகவல்களை நினைவுபடுத்த விரும்பினால், விஷயங்களை நாம் தேர்ந்தெடுப்பதானது திட்டமிட்டபடி இருக்க வேண்டும்.

நினைவு - கோப்பு(பைல்) படுத்துதல் செயல்பாடு:

நினைவுபடுத்தல் செயல்பாட்டை நாம் எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், நாம் அதை கோப்பு(பைல்) பராமரிப்பு முறையுடன் ஒப்பிடலாம். கோப்பாக்க செயல்முறையில், பின்னால் தேவையானவற்றை பெற, தற்போது முறைப்படி, வகைப்பிரித்து வைக்கிறோம். பின்னர் தேவைப்படும்போது தேவையான பிரிவில் தேடி ஒரு தகவலை எளிதாக எடுத்துக் கொள்கிறோம். அதுபோலத்தான் மூளை செயல்பாடு. தேர்வு எழுதும்போது நமக்கு தேவையான விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை எனில், படித்ததை நாம் முறைப்படி பதிவுசெய்து வைக்கவில்லை என்று அர்த்தம். (அதாவது வருடம் சம்பந்தமான விஷயத்தை பிற வருடங்களோடு பொருத்தி பார்த்து வகைப்படுத்தியும், சம்பவங்களை தனியாக வகைப்படுத்தியும், பிறப்பு-இறப்புகளை தனியாக பொருத்தி வகைப்படுத்தியும் வைத்தால் நினைவுபடுத்துவது எளிது)

நினைவக அமைப்பு:

தகவல்களை குறியீடாக்குதல் செயல்முறையை மாணவர்கள் தெளிவாக செய்தால், தேர்வின்போது அவற்றை நினைவுபடுத்தல் மிகவும் எளிது. பலவிதமான அனுபவங்களின் மூலம் விஷயங்களை இணைக்கலாம். ஒருவர் தகவல்களை ஒற்றைக் குறியீட்டு முறையில் பதிவுசெய்தால், அவற்றை மீண்டும் நினைவுபடுத்துவது சிக்கலாக இருக்கும். பலவித தகவல்களின் இணைப்புகள் வழியாக ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டால், நினைவுபடுத்தல் எளிதாக இருப்பதோடு, அதிககாலம் நினைவில் வைக்கவும் முடியும் (அதாவது ஒரு விஷயத்தை தனித்து நினைவில் வைத்துக்கொள்வதை விட, அதனோடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களோடு அதை பொருத்தி, சங்கிலி இணைப்பைப் போல நினைவில் வைத்துக்கொண்டால், ஒன்று மற்றொன்றை தூண்டி, தேவைப்படும் விஷயமானது நமக்கு எளிதில் நினைவுக்கு வந்துவிடும்). இதனால் தேர்வுகளை சிறப்பாக மாணவர்கள் எழுத முடியும்.

மாறுபட்ட நினைவாற்றல்கள்:

சிலருக்கு சிறந்த நினைவாற்றல் இருக்கலாம், சிலருக்கு அது மிகவும் குறைவாக இருக்கலாம். அதிக நினைவாற்றல் உள்ளவர் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்றோ, குறைந்த நினைவாற்றல் உள்ளவர் சபிக்கப்பட்டவர் என்றோ மாணவர்கள் நினைக்கக்கூடாது. சிறப்பான நினைவாற்றல் என்பது நன்றாக கவனித்தல், மதிப்பிடுதல் மற்றும் பயிற்சி ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது. உடலின் மற்ற செயல்பாடுகளைப் போலத்தான் நினைவாற்றலும். எனவே நீங்களும் மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டால், தேர்வு சமயத்தில் மட்டுமின்றி எப்போதும் சிறப்பான பலன்களை பெற முடியும். அனைவருக்குமே நல்ல நினைவுத்திறன் உண்டு. ஆனால் நாம் அவற்றை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நமது வெற்றி அடங்கியுள்ளது.

நினைவாற்றலை மேம்படுத்தல்:

சில மாணவர்கள் குறிப்பிட்ட மருந்துகளின் மூலம் ஞாபக சக்தியை அதிகப்படுத்தலாம் என்று தீவிரமாக நம்புகின்றனர். பல மருந்து நிறுவனங்கள் தங்களின் வியாபார நோக்கத்திற்காக செய்யும் பிரச்சாரமே இது. மருந்துகளை சாப்பிட்டு யாரும் சிறந்த நினைவாற்றலைப் பெற்றதாய் ஆதாரமில்லை. நமது உணவு முறையில் அக்கறை காட்டாது, பலவித காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது பொதுவாக மூளை செயல்பாட்டை பாதிக்கும். எனவே முறையான மற்றும் சீரான உணவுப்பழக்கமே சிறந்த நினைவாற்றலுக்கு உதவும். மேலும் தேர்வுக்கு படிக்கும்போது மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் டென்ஷன் ஆகியவையும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த டென்ஷனை நேர்மறை சிந்தனை, தியானம் போன்றவற்றால் கட்டுப்படுத்தலாம்.

ஹோமியோபதி, மலர்மருந்துகள், ஆயுர்வேதா, சித்தா போன்ற மருத்துவ முறைகளில் நினைவாற்றலை அதிகரிப்பதற்கான சிறந்த மருந்துகள் உள்ளதாக பல தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அதேசமயம் மருந்துகளை நம்புவதைக் காட்டிலும் முறையான சிறந்த உணவுமுறையும், தியானமுமே நமக்கு உதவும்.

இவைத்தவிர நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான பலவித எளிய மூளை விளையாட்டுகளும் உள்ளன. அவற்றில் நீங்கள் ஈடுபடுவதன் மூலமாகவும் உங்களின் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளலாம்.


புதன், 2 பிப்ரவரி, 2011

உங்களின் எதிர்கால துறையை தேர்ந்தெடுக்க......

Posted On 1:52 AM by pmect 0 கருத்துகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்
நமது வருங்கால தொழில்துறை எது என்பதை தேர்ந்தெடுப்பதானது, நம்மை பெரிய யோசனையிலும், குழப்பத்திலும் ஆழ்த்தக்கூடிய ஒரு விஷயம்.
பெரும்பாலான மாணவர்களுக்கு எந்த இடையூறுமின்றி தங்களின் விருப்ப இலக்குகளை தேர்ந்தெடுப்பது சவாலாகவே உள்ளது. விருப்பமில்லாமல் திணிக்கப்பட்ட இலக்குகள், தெளிவற்ற இலக்குகள், சாத்தியப்படாத இலக்குகள் ஆகியவற்றால், உங்களின் முயற்சி, காலம், பணம், சிந்தனை போன்றவற்றை முறையாக செலவழிக்கத் தெரியாமல், அனைத்துமே வீணாகும் அவலநிலை ஏற்படும்.

எனவே இத்தகைய இழப்புகளை தவிர்க்கும்பொருட்டு, அவரவர்களுக்கு சரியாக பொருந்தக்கூடிய, சாத்தியமானதாகவும், விருப்பமானதாகவும் இருக்கக்கூடிய, அடையக்கூடிய வழிகள் தெளிவாக தெரியக்கூடிய இலக்குகளை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

விரிவான ஆலோசனைகள்:

* விருப்பமான தொழில்துறையை தேர்ந்தெடுப்பது, தனிப்பட்ட ஒரு மாணவரின் சொந்த முடிவாக இருக்க வேண்டும். ஏனெனில் இலக்கை அடைவதற்கான பயணத்தின் விளைவுகளை முழுமையாக எதிர்கொள்பவர் அவர்தான். பெற்றோர், உறவினர் அல்லது ஆசிரியர் போன்ற தரப்புகளிலிருந்து வருங்கால லட்சியத்தை தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக வரும் வற்புறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள், மாணவரை மனோரீதியிலான துன்பத்திலும், குழப்பத்திலும், வெறுப்பிலும் ஆழ்த்திவிடும்.

* ஒரு சரியான லட்சிய தேர்வு என்பது, மாணவரின் விருப்பங்கள், திறன்கள், ஆற்றல்கள் ஆகியவற்றோடு முறையாக இணைந்ததாகவும், அந்த எதிர்கால வேலையானது சூழல் ரீதியாகவும், வருவாய் ரீதியாகவும் திருப்தி தரக்கூடியதாய் இருப்பதாகவும் இருக்க வேண்டும்.

* எதிர்கால லட்சியத்தை தேர்ந்தெடுப்பது முதலில் கனவிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. எதிர்காலத்தில் யாராக இருக்க விரும்புகிறோம் என்ற கனவு அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். விஞ்ஞானியாக, மருத்துவராக, பேராசிரியராக, சினிமா இயக்குனராக, தொழிலதிபராக, பெரிய அரசு அதிகாரியாக, தொல்பொருள் நிபுணராக, தத்துவ ஞானியாக, இசை கலைஞராக, அரசியல்வாதியாக என்று பல நிலைகளில் மாணவர்களுக்கு கனவுகள் உண்டு. கனவுகள் இல்லாதவரிடத்தில் பெரிதாக எதுவும் இருக்காது என்று ஒரு சீன பழமொழி கூறுகிறது.

* கனவுகள் லட்சியத்தை வகுக்க உதவுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் வரலாறுகளை படித்து, அந்த வெற்றிக்கான காரணியை ஆராய்ந்தால் அதற்கான அடிப்படையாக இருந்தது லட்சியம் என்பது தெரியவரும். எனவே கனவு லட்சியமாகி, அந்த லட்சியம் உங்களின் செயல்களை தீர்மானிக்கும்.

* உங்களின் கனவை நனவாக்க வேண்டுமெனில், எதிர்கால தொழில்துறையை முடிந்தளவு விரைவாக முடிவுசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தாமதிப்பதானது, லட்சியத்தை அடைவதில் தேவையற்ற பெரும் கால விரயத்தை ஏற்படுத்திவிடும்.

* உங்களின் தொழில்துறையை முடிவுசெய்யும் செயல்பாட்டின்போது, உங்களின் கனவில் இடம்பெறாத பலவித விருப்ப வாய்ப்புகளை பற்றியும் கேள்விப்படுவீர்கள். இதுபோன்ற விருப்ப வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள அதுசம்பந்தமான செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், இணையதளம் ஆகியவற்றை பயன்படுத்துவதுடன், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தொழில் ஆலோசகர்கள், தொழில்துறை பற்றி பரவலான அறிவுடைய நபர்கள் ஆகியோருடன் இதுசம்பந்தமாக கலந்துரையாடவும் வேண்டும்.

* எதிர்கால தொழில்துறையை முடிவுசெய்வதற்கு முன்னர் இருக்கும் முக்கிய பணி, உங்களை நீங்கள் கண்டுகொள்வதாகும். உங்களின் இயல்பான ஆர்வம், திறமை ஆகியவைப் பற்றி தெளிவான புரிதல் இருக்க வேண்டும். நமது ஆர்வம் மற்றும் விருப்பங்கள்தான், லட்சியத்தை அடைவதற்கான கடினமான பயணத்தில் நமக்கு துணை நின்று பேருதவி புரியும். உங்களின் திறமை, ஆற்றல், குணாதிசயம், ஆர்வம் ஆகியவற்றை கண்டுணரும் செயல்பாட்டில் நீங்கள் மிதமிஞ்சிய கற்பனையின்றி மிக சரியாக செயல்பட்டால்தான் தெளிவான முடிவு கிடைக்கும்.

* உங்களின் சொந்த திறமை மற்றும் ஆற்றல்களை அறிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல உங்களின் எதிர்கால தொழில்துறைக்கு தேவையான புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.

* உங்களின் எதிர்கால லட்சியத்தை முடிவுசெய்த பின்னர், அதைப்பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் மறுஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் நாளுக்குநாள் மாறிவரும் இந்த உலகில் எந்த விஷயமும் நிலையாக இருப்பதில்லை. எனவே மாறும் சூழலுக்கு ஏற்ப உங்களின் லட்சியத்தை பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* லட்சியத்தை முடிவுசெய்து விட்டால் மட்டும் எல்லாம் முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கை என்ற அளவில் பொதுவாகவும், லட்சியம் என்ற அளவில் குறிப்பாகவும் உங்களின் ஆளுமையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். லட்சியத்தை அடைவதில் இந்த தன்மை முக்கிய பங்கு வகிக்கும்.

* விரும்பிய தொழில்துறையை அடைவதில் நமது கல்வித்தகுதி பெரியளவில் பங்கு வகித்தாலும், ஒருவரின் பொது புரிந்துணர்வு திறன், பரவலான அறிவு மற்றும் சிறப்பு பயிற்சி போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே ஒருவர் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.




வெள்ளி, 28 ஜனவரி, 2011

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

Posted On 7:11 AM by pmect 0 கருத்துகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை' செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
6) ''எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!


Related Posts Plugin for WordPress, Blogger...